Thursday, 14 July 2016

வாக்கும் நோக்கும்-2

வாக்கும் நோக்கும்-2
ஆற்றின்ப வெள்ளமே -திருவாசகம் 

         இறைவனை, எம்பெருமானை அழைத்து மகிழ ,துதித்து மகிழ, கூவி அழைக்க ,ஆயிரம், ஆயிரம் நாமங்கள் உண்டு. ஆனாலும் மணிவாசகர் பெருமான், திருவாசகத்தின் முதல் பதிகம், சிவபுராணத்தில் ஓரிடத்தில்  ஆற்றின்ப வெள்ளமே என்று அழைத்து மகிழ்ந்திருப்பார்.ஆற்றின்ப வெள்ளம் எப்படிப்பட்டது , அதனை உவமையாக்கி இறைவனை துதிக்க என்ன இருக்கிறது. அதன் விளக்கம் இவ்வாறாக வருகிறது. 
        முதலில் ஆறு என்பது இந்த உலகின் ஜீவ நாடி, எல்லா உயிர்களுக்கும் வடிவதானம் செய்யும் பிரபஞ்ச சக்தி பஞ்சபூதங்களில் ஒன்று. நீரின்றி அமையாது உலகு , ஆகவே இறைவன் உயிர்களுக்கு இதுபோன்று இன்றியமையாதவன். தாக்கம் தணிக்க நமக்கு நீர் உதவும், அதுபோல் பர உலக  தரிசனம் காண, முக்தி எனும் பதம் அடைய நீராய் இருந்து தனிப்பவன் இறைவன்.

        ஆறே இன்பம் தான், அதுபோல் இறைவனும், ஆனாலும் ஆற்றின்ப வெள்ளமே என அழைக்கின்றார். ஓடிக்கொண்டே இருக்கும் வெள்ளம் தான் ஆறு, அது கடந்த பாதை கடந்தது தான், அதில் ஓர் முறை நாம் மூழ்கி எழுந்தோம் ஆனால் அடுத்த முறை மூழ்கும் போது புது வெள்ளமே நம்மை அணைக்கும், புதிது, புதிதாய் ஓடிவந்து நம் அழுக்கை எல்லாம் களைந்து செல்லும். இறைவனும் அப்படித்தான், ஒவ்வரு முறை அவனை நினைந்துருகி நிற்கும் போதும் புதுமையாய் இன்பம் தருவான், அதுவும் பேரின்பம். எந்த நேரம் நினைந்துருகினாலும் புதியதோர் இன்பம். இறைவனை நினைந்த நெஞ்சில் அவன் அருளால் ஆணவம் எனும் அழுக்கு களையப்படும்.
                 ஆற்றின்ப வெள்ளத்தில் மூழ்கும் ஆனந்தம் அலாதி, அது தன்னை  மறந்த ஆனந்தம், நாமும் ஓர் குழந்தையெனவே உள்ளம் துள்ள நிர்மலமான ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலை. மூழ்கும் நேரம் மூச்சு அடக்க வேண்டும்,உள்ளே மூழ்கும் கணம் தயக்கம் வருவதும் இயற்கை, அதை கடந்து  லயித்து மூழ்க , அங்கேயே நின்றிருக்க ஆவல் வரும், நேரம் கடப்பதும்  தெரியாது.
              வற்றாத ஜீவ நதிகள் நிறைந்த நம் நாடு, தற்போது காய்ந்துப் போன நதிகள் தென்பட்டாலும்,மணல் கொள்ளையால் உரு  மாறி நின்றாலும் என்றும் ஈரம் நிறைந்திருக்கும். இறை நம்பிக்கை என்பதை மறுத்து ஆயிரம் கருத்துக்கள் வந்தாலும், ஓடிவரும் ஆற்றின்ப வெள்ளத்தை நாம் அறியாது போனதே நமக்கான கேடு, ஆயினும் பாரதம் ஆண்டாண்டு காலமாய் ஆன்மீகம் தழைத்த பூமி ஆற்றின்ப வெள்ளத்தை நாம் என்றேனும் அனுபவித்தே உய்யவடைவோம் .

வாக்கும் நோக்கும் -1

வாக்கும் நோக்கும் -1
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
                                                                                    -திருவாசகம் 

அருவும், உருவும், அருவுருவம் தாங்கி நிற்கும் இறைவனை துதிக்க பற்பல வாக்குகள் உண்டு. அதில் மணிவாசகர் திருநா உதித்த இந்த திருவாசகம் பல நாளாய் என்னுள் உழன்று ,உணர்வில் கலந்து பலவாறு நிறைந்துள்ளது என் சிந்தையில்.

"அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே" , இதனினும் அழகாய் இறைவனின் இருப்பை உணர்த்தும் வாக்கு ஏதேனும் உண்டோ !

இறைவன் அறிவே வடிவானவன், ஞானானந்த மூர்த்தி, அஞ்ஞானம் என்பது எதுவென்று அவன் அறியான் ஏனெனில் அவன் அறிவே வடிவானவன். பதியை பற்றி நிற்கும் பசுவாகிய நாம் தான் அறிவித்தால் அறியும் அறிவு பெற்றவர்கள். அறிவித்தால் அறியப்படும் எனும் போதே அங்கே அஞ்ஞானம் நிறைந்து உள்ளது என்பதே பொருளாகும்.
ஆகவே அஞ்ஞானம் நம்மை சார்ந்தது, அதனை அகற்றி மெய் ஞானம் புகட்டுபவனே இறைவன். 

அஞ்ஞானம்- என்பதின் பொருளில் நம்மிடையே எவை எல்லாம் உண்டு என்ற கேள்விக்கு பதில் என்பதன் பட்டியல் நீண்டு நிறைந்திருக்கிறது. நம் மனம், செயல், வாக்கு ஆகியவற்றால் எண்ணற்ற வினைகளை செய்கிறோம், இதில் அத்தனையிலும் அந்த  நொடியில் சரியெனப் பட்டத்தை அறிவுள்ள செயல் என்றே செய்கின்றோம், அதன் பின் விளைவில் அல்லது ஆராய்ந்த பின்னே, சமய சந்தர்ப்பம் கிடைத்து நாம் உணர்ந்தப்  பின்னே அதில் உள்ள பல பிழைகள், அஞ்ஞானம் நமக்கு தெரியவருகிறது.
                      நம்மால் உணரப்பட்ட அஞ்ஞானம், உணரப்படாத அஞ்ஞானம் , என்றுமே உணர்த்தப்படாத அஞ்ஞானம் என இதுவும் வகைகள் அதிகம். சமய சந்தர்ப்பங்கள் பிழைகளை உணர்த்தலாம், என்றேனும் ஆத்ம தரிசனம் பெற்றால் அங்கே நிறைந்திருக்கும் அஞ்ஞானம் அகற்றப்படலாம், அதனினும் உற்று நோக்கினால் அவனும், அவனியும் புலப்படலாம் , அதுவரை நிலவிய அஞ்ஞானம் அகற்றப்படலாம். மறைந்து நிற்கும் ரகசியங்கள், புலப்படாத ஞானம், உணரப்படாத உணர்வுகள், உணர்த்தப்படாத வினை பிழைகள் யாவும் அஞ்ஞானம். 

                        அஞ்ஞானம் என்னும் இவற்றை எல்லாம் அகற்றும் ஆற்றலை நாம் இறைவன், பரமம் ,பிரம்மம், சிவம் என்கிறோம். ஞானமார்க்கிகள் யோக வழியில் ஞானம் என்கின்றனர், பக்தி வழியில் அதை சிவம் என்கிறோம், பகுத்தறிவாளர்  என பெயரிட்டுக்கொள்ளும் மனிதர் மட்டும், நல்லறிவு தான் இறைவன் என்பதை பகுத்தறிய மறுத்து, இறை என்பதையும் மறுத்து அஞ்ஞானம் என்னும் கட்டில் பிணைந்துள்ளனர்.

                       அஞ்ஞானம் எனும் இருள் மறைந்து, நல்லறிவாகிய இறைவனின் ஒளி நிறைந்தால் உலகில் குற்றங்களும்,துன்பங்களும், துக்கங்களும் அகலும். அஞ்ஞானம் அகல என்றும் அவன் அருளை பெற பிரார்த்திப்போமாக!