Sunday, 14 February 2016

உலகம் நம் கையில்


உலகம் நம் கையில்

ஆதி நாயகன் அருட்பெரும் கருணையில்
அணுவணுவாய் விரிந்து அண்டம் ஆனது
அதனில்பல பிண்டம் உருண்டு உருவானது
சுழன்று சுற்றி உயிர்கள் வாழும் உலகானது

பஞ்சபூத சேர்க்கையில் பரிணமித்த உலகிது
பரிணாம வளர்ச்சியில் பாந்தமாய் அமைந்தது
வளங்களும் நலன்களும் பூரணமாய் நிறைந்தது
மனித சமுதாயம் பாங்குடன் சிறப்புற வாழ்ந்தது

இயற்கையின் கொடையில் இன்பப் பெருவாழ்வு 
இதுமட்டும் போதுமென்றால் இன்னல்கள் ஏது
மூவித குணங்களும் நவரசம் நிறைந்த உலகிது
தினையோடு சேர்த்து வினையும் விதைத்தது

செய் கர்ம பலனது பலவாய் விளைந்தது கடுமையாய் 
மாயோன் திருவாய் உமிழ்நீரில் உருண்டும் என்ன
தசாவதாரம் புரிந்து அவன் வினை முடிக்க முயன்றும்
தற்காலிக பலனாய் தற்சமயம் தரணியைக் காத்தது

மது,மாது,மதம் எனும் மாயையின் பிடியில்
மனிதம் மறந்த மனிதர் தீவிரவாதம் வளர்க்க
நாளொன்றும் தீயன தவிர்த்து நன்மை பெறப்
பிரம்ம பிரயத்தனம் கொண்டு உருளுது உலகு

பெரும் மழையும், பேரழிவும் சாகாத மனிதம்
உண்டெனப் பறை சாற்ற ,சிறிதே ஆசுவாசம்
உலக உருண்டை நம் கை வலையில் உண்டு 
விரிப்போம் அதனை அவனியைக் காத்திட

என் குடும்பம் ,உறவு,இனம்,மொழி மதம்
மாநிலம்,நாடு கண்டம் எனும் கட்டுக்கள்
உடைத்தெறிந்து பூமித்தாயின் நன்மக்கள்
எனும் அகண்ட சிந்தனையில் இணைவோம்

சிந்தனை ஒன்றுபட மனவலிமை பிறக்கும்
மனம் உறுதிப்படச் சகோதரத்துவம் மலரும்
சண்டையும் சச்சரவும் காத தூரம் ஓடும்
 மனிதம் காத்து  சகோதரத்துவம் வளர்ப்போம்
 வாரும் வாரும் உலகம் நம் கையில்

No comments:

Post a Comment