Sunday, 4 December 2016

அம்மா அம்மா !

அம்மா அம்மா !

விதையாய் விழுந்து உன் அகப்பையில்  நிறைந்து 
நின் சுவாசம், நின் குருதி, நின் வெப்பம் உறிஞ்சி 
அருவம் தொலைத்து உருவம் ஆகி, பிண்டம் உயிர்த்து 
உன்னுள் நிறைந்ததே உலகம் என உருண்டு புரண்டு 
உன் உள்ளம் கொண்ட கனவு , எண்ணம்,ஏக்கம் எல்லாம் 
என்னிலும் நிறைத்து வளர்ந்த பத்து மாத பந்தம் !

உன்னுள் வலியை நிறைத்து என் வழியில் நான் 
பிறந்தேன் வளர்ந்தேன் வளர்த்தாய்  நீ !
பிறவி பெருங்கடலில் எதிர்நீச்சல் எட்டிப் போட்டு 
எமனே வந்த போதும் எதிர்த்து நின்றாய் !
என் கடமை முடிந்த பின்னே வாடா என்றே 
துணிவுடன் கூக்குரலிட்டு நின்றாய் !

மடிவிட்டு இறங்கிய பிள்ளைகள் தத்தி நடக்க 
வாழ்க்கை ஓட்டத்தில் ஓட கற்று தந்தாய்!
இன்ப துன்பம் யாவிலும் தோள்  கொடுக்க 
பிள்ளைகளுக்கு தக்க துணை தேடித் தந்தாய் !
வந்த கடமை முடிந்தது என நோயால் நொந்த 
உடல் விடுத்து உயரே பறந்து விட்டாய் !

பள்ளி சென்ற வேளையில் படிப்பித்த உன்னிடம் 
மதிப்பெண் காட்ட மறுத்தேன் !
அப்பா கையெழுத்து தான் வேண்டும் என,
அன்று விழுந்தது கன்னத்தில் அறை 
தாத்தா பரமசிவம்  தந்தார் !
அன்று தவறு திருத்தப் பட்டது. 

ஆனால் மீண்டும் வருடங்கள் தாண்டி 
அந்த பரம சிவம் தந்த அறை !
திருத்த இயலா தவறாய் தேடுகிறேன் உன்னை !

தாயாகவே வாழ்க்கைப்படும் மாதர்களில்!
துறு  துறுவென திரியும் தோழிகளிடம் !
சுற்றம் மெச்சும் சுமைதாங்கிகளில் !

சகித்து வாழும் சகோதரிகளில் !
பொறுமை கொண்ட பெண்மணிகளில் !
துணிந்த மனம் கொண்ட மங்கைகளில் !

உடல் நலிந்த விதவை தாய்களில் !
தனியாய் மக்களை கரை சேர்க்கும் 
தன்னலம் கருதா தாயுள்ளங்களில் !

எல்லாம் வல்ல இறைவன் இரங்கி 
மறைந்தாரில் ஒருவரை தாரேன் என 
எனக்கு வரம் தரட்டும் ! அந்நாளில் 
திரும்பிவிடு என் அம்மா அம்மா !






No comments:

Post a Comment