Sunday, 13 September 2015

இவ்விதம் செய்தாய் போலும்

இவ்விதம் செய்தாய் போலும் 

சுத்தமாய் என்றும் உடையவன் நீ 
அசுத்த ஆன்மா என்றும் நான் 
என்னுள் நீ எனில் 
நான் ஏன் அசுத்தமானேன் 
அசுத்தமாய் நான் எனில் 
என்னில் நீ எங்கே 
நான் எனும் நான் எது
நான் எனும் என்னில் நீ 
தனித்தும் ஒன்றியும் 
ஒட்டி ஒட்டாமல் நின்று 
வேடிக்கைப் பார்ப்பாயோ?
ஆடட்டும் அடங்கட்டும் என !
ஆம் அதுவும் சரிதானே 
பட்டுத் தெரிந்தால் தான் 
பரம் எனும் மகத்துவம் 
அறியும் இந்த நான்.
அதற்காய் இதை இந்த நானை 
இவ்விதம் செய்தாய் போலும் 
பற்பல எண்ணம் தந்து 
குணம் தந்து திறமை தந்து 
பிடிப்பு தந்து பாசமெனும் 
தளையைத்  தந்து 
தவிக்க விட்டு தாண்டிவர 
தரிசனம் கிட்டும் எனும் 
சிந்தையை தந்தாய் 
இப்போது எதைப் பிடிக்க 
எதை விடுக்க, எதை நோக்க 
எதை தவிர்க்க ,கழித்து கழித்து 
காத தூரம் வந்த பின் 
கழித்ததை நோக்கா 
சிந்தையும் வேண்டுமே 
சலனம் கொண்ட மனதில் 
ஆசை எனும் நெருப்பை 
அனைத்து உள்ளம் புண்படாமல் 
அக்னி பரிட்சையில் தேறி 
அத்தா நீயே சரண் என 
நின் கழல் பற்றவேண்டுமே!
இப்பிறவியில் சாத்தியமா 
மாய்த்து, மறைத்து ,மறுபிறப்பை 
தருவாயோ? ஆனால் அதற்கும் 
கலங்கேன் தருவது நீதானே 
தெளிவு கொடு ,காட்சி கொடு 
இவ்விதம் நான் எனும் இதில் 
எனைப் புகுத்தி நின்றாயே 
நானதேது? நீயதேது ?
புறக் காட்சி விடுத்து அகம் புகவும் 
அகத்தே வந்து அறிவுறுத்து! 
குழம்பி குட்டை போல் உள்ளது 
தெளிந்த நீரோடையாக்கு 
நம்பி நிற்கிறேன் 
சிந்தை தெளிய நான் எனும் இதை
 இவ்விதம் செய்தாய் போலும் 
என்றே.


No comments:

Post a Comment