பெண் என பிறவி பிறந்த மகள்
மழலை மொழி பேசி மகிழ்வுடன்
சுற்றம் மகிழும் சுகந்தமானவள்
சொப்பு சாமானில் சமைத்து
சிறுமியாக இருந்த நாள் முதல்
குடும்பம் நடத்த நடை பயின்றவள்
உடன் பிறப்புகள் நட்பாக நின்று
தோள் கொடுத்து துணை நிற்பவள்
குச்சு புகுந்து மங்களம் நிறைந்த
கணனியாய் பூத்து நிற்பவள்
தாவணி தழைந்தாட அசைந்து
அன்னநடை பயின்று நின்றவள்
தலைவன் கைதலம் பற்றியவள்
அவன் தன் அகம் சிறக்க அறம்
தழைக்க இல்லறம் புகுந்தவள்
மனைமாட்சிமை நிறைந்தவள்
தாயாக உயர்ந்து தரனி வென்றவள்
ஆயுள் முழுதும் அயராது உழைத்து
சொந்த பந்தம் சுகம் பேணி
சுற்றம் நடப்பில் கலந்திருந்தவள்
தொங்க தொங்க தாலி கட்டி வட்ட
குங்குமம் இட்டு வளையல் நிரப்பி
பட்டு சேலை சரசரக்க நின்றவள்
மங்கையர்க்கரசி ஆகி நின்றால்
ஓர் நாளில் வாழ்ந்த வாழ்வில்
நிறைவு கொண்ட தலைவன்
தான் கொண்ட கடமை முடிந்தது
என வானகம் நோக்கி பறந்துவிட
பிரிவு துயரில் துடித்த பெண்மை
தன் துயர் தாங்கி தேறி நின்று
பிள்ளைகள் சுற்றம் நலம் வேண்டி
ஆண்டவன் திருவடி பற்றி நிற்க
மங்களம் பொங்கும் வாவரசி என
வாழ்த்தி நின்ற இம் மண்ணுலகு
விதவை எனவே தனிமை செய்தது
அமங்களம் என்றே தூற்றி நின்றது
எழுத்தில் காண்கையில்
ஏட்டில் படிக்கையில்
எங்கோ நடக்கும்
செய்கை என்றே எண்ணமிருந்தது
கண் முன்னே
காண்கையில்
கையாளாகாது
கடக்கும் மானிடம்
பதிவில் காண்கையில்
லைக் இட்டு மட்டும்
தான் உயர்ந்தோன்
எனக் காட்சி படுத்தும்
மனிதஇனமோ இது
பெண்ணுக்கு பெண்ணும்
மூட மதியும் மூட நம்பிக்கையும்
பேதமையும் எதிரே!
என்று தனியும் இந்த
பெண்மையின் சோகம்?
**********************************************************************
என் மனதின் மாளிகையில்
உயர்ந்த ஓர் உயரத்தில் நீ
குணம் மிக்க உயர் பிறப்பாய்
பாசம் மிகுந்த பண்பாளனாய்
அங்கிருந்து வீழ்ந்து விட்டாய்
நீயும் அறியாமல் நீ வீழ்ந்தாய்
ஆனால் காயமடைந்தது நான்
மனம் ரணமானது எனக்கு
மாறாத வடு உண்டானது
என் நம்பிக்கை தகர்ந்தது
இதில் தவறு எனது தான்
நீ உயரே இருந்தாய் என்றே
உனக்கே தெரியாது அதில்
உன் தவறில்லை எனது தான்
உன் இயல்பு அது தான் என
உணரா தவறு, உன் செய்கை
சராசரி தான் என அறியா தவறு
உன்னிடம் கொண்ட உரிமை தவறு
தன்னவன் தான் எனும்
எண்ணத்தில் தவறு என என்
தவறு ஏராளம் இருக்க உன் மேல்
தவறு என எப்படி குற்றம் சுமத்த
ஆனாலும் நீ வீழ்ந்ததில் அடி எனது
காயம் எனது வலியும் எனது
இனி என் தவறு திருத்தப்படும்
யாரையும் உயரே ஏற்றாமல்
இயல்பான மனிதன் எனவே
இன்னொருவர் மொழியில்
எதிர்பார்ப்பு வன்முறை இன்றி
இயல்பாய் ஏற்பேன் யான்
யாரையும் ஏற்றாது தூற்றாது
யாரும் விழ வேண்டாம்
எனக்கு வலியும் வேண்டாம்