Monday, 1 June 2015

பக்தி மோகம்-1

மோகம் விடுத்த பக்தி பத முக்தி தரும் 
முன் உதாரணமாய் வந்தான் ஓர் பக்தன் 
புட்பதத்தன் எனும் நாமம் தரித்தவன் 
கானம்   இசைக்கும் கந்தர்வன் அவன் 
கவிபாடி மகிழ்ந்திருக்கும் சிவபக்தன் -1

பாமாலை பாடி பரமனை பணிந்தாலும்  
பூமாலை சூட்டி புளங்கிதம் அடைவான் 
மாயமாய் மறையும் மந்திரம் அறிந்தவன் 
கண்கட்டு வித்தை பயின்ற விண்ணவன் 
தடை தாண்டி தாவி இறங்கும் கந்தர்வன் -2

பல விதமாய் வண்ண மலர் கொண்டு 
மகேசனுக்கு சூட்டி மகிழ்வானவன் அது 
மாற்றான் தோட்டத்து மலரென்றாலும் 
மாற்று கருத்து கொண்டானில்லை மதி 
மயங்கி மோகம் கொண்டு கொய்வான் அதை -3

பக்தி மேல் கொண்ட மோகம் அது அவனை 
பற்றிவந்த பல நாள் நோய் ஆனது மலரென்று 
கண்டால் போதும் கொய்து அபிசேகிப்பான் 
அப்பனுக்கு அன்றொருநாள் சித்ரரதன் என்ற 
மன்னவன் மாளிகை கடந்து செல்கையில் -4

அழகிய வண்ண மலர்சோலை கண்ணில் பட 
தன்னையும் மீறி தரை இறங்கி இயன்றவரை 
அரியவகை மலர்களை அள்ளிக்கொண்டான் 
மணக்கும் மலர் கொண்டு மனதில் மகிழ்வுடன் 
மங்கைபாகருக்கு  சூட்டி மயங்கி நின்றான் -5

மன்னவனும் பக்தி நெறி தவறா சிவபக்தன் 
சிவபூஜை செய்ய கரடியாய் வந்த கந்தர்வன் 
பற்றி அறியாமல் காவலரை கடிந்து காவலை 
அதிகரிக்க அன்றும் அபகரணம் ஆனது மலர்கள் 
வகைஅறியா மன்னவன் விழித்து நின்றான் பின் -6

களவை கையுடன் பிடிக்க எண்ணி கவனமாய் 
தோட்டத்தில் வில்வ இலைகளை விரித்தான் 
வில்வம் விஸ்வநாதன் விருப்ப  இலை அதை 
மிதித்தால் ஓசை வரும் ஒருபுறம் மிதித்தவன் 
ஆசை வீணாகும் மறுபுறம் என காத்திருந்தான் -7

வினை அறியா கந்தர்வன் மற்றவர் பார்வை மயக்கி 
பரவி இருந்த வில்வ இலை கருத்தில் கொள்ளாமல் 
மலர்களை கொள்ளை கொள்ளும் கொள்கையுடன் 
பாதம் வைக்க ஓசை எழுப்பியது வில்வம் ஓர்புறம் 
சமாதி இருந்த சதாசிவம் சற்றே கலைந்தது மறு புறம்.-8

நாயன்மார் நாயகர் நயனம் திறந்தார் அக்கணமே 
வில்வம் பரப்பிய மன்னவனும்,அதில் அடி வைத்த 
கந்தர்வனும் காட்சியில் தோன்ற மனிதனை மன்னித்து 
விண்ணவன் சக்தி எல்லாம் விரையம் ஆக சபித்தார் 
மாயம் கைவிட்ட கந்தர்வன் சித்ரரதன் கைதி ஆனான் -9




No comments:

Post a Comment