Sunday, 21 June 2015

அம்மா

அம்மா 

உச்சரிக்கும் ஒவ்வோர் முறையும்
உணர்வு அலை எழுப்பும் சொல் 
அவள் அருமை அறியாத சேயும் 
மறைந்த பின்னே தாய் மடி தேடி 
தவித்தபடி அலைந்து திரியும்


உயிர் வளர்த்த அன்னை 
தன் உடல் பிளந்து வலி தாங்கி 
தளம் இறக்கினால் என்னை 
அவள் நோவை நான் அறிந்தது 
நான் தாயான பின்னே


கரு தாங்கி வந்த தலை மகவு நான்
தமக்கை தந்த தலை மகனுக்காக 
தாயாய் வந்த அந்த மங்கைக்கு 

அம்மா என்ற அழைப்பு 
மறுஒலிதான்

நீ மடியில் கிடத்தியது தோளில் 
சாய்தியது இடுப்பில் இடுக்கியது 
உச்சி முகர்ந்தது,எதுவும் நினைவில் இல்லை
இவை இன்றி நான் வளரவும் இல்லை


விழித்து எழும் போதே வீறிட்டு அழும் 
அடம் நிறைந்த அழுகினி மகளை 

ப்ரம்ம ப்ரயத்தனத்துடன் சமாளித்து 
சகித்து உயர்ந்த தாய்மை உனது


தாய் தந்தை வழி முதல் பெண் மகவு
இயல்பான பாசம் அனைவரும் செய்ய 
நீராட்டி ஆடை அணிவித்து மை இட்டு 
குடிமி இட்டு பூ சூடி அலங்கரித்த உன் 
செயலுக்கு புகைப்படம் சாட்சி சொல்ல
மனதில் இளமையுடன் உறைந்த தாய்


பருப்பு சோறு பிணைந்து பக்கம் வழித்து 
கோழியுருண்டை கொக்குருண்டை வைத்து 
இடுப்பில் இடுக்கி பறந்து வந்த காக்கை 
ஓடி வரும் அணில் புதிதாய் வந்த நாய் 
என புதிது புதிதாய் வேடிக்கை காட்டி
ஒருவாய் தண்ணி ஒருவாய் சோறு

என உன் பசி மறந்து என் பசி போக்கி
ஓய்வு எனும் உறக்கம் மறந்து 
வளர்த்தாயோ அம்மா


உடனிருக்கச் சொல்லி
அடம்பிடிக்கும் எனை 
சிறிது நேரம் ஓரிடத்தில் 
சிறை வைக்க உபாயம்
சனல் சாக்கை இருபுறமும்
போட்டு நடுவே எனை நிறுத்தி
நான் அழுது ஆர்ப்பாட்டம்
செய்தாலும் காணதது போல்
ஓர் கண் வைத்து கரிசனமாய்
நீ எனை வளர்க்க கண்ட
சாமர்த்தியம் என் சொல்ல!

தனிவாய் கட்டிய சேலைத் தொட்டில் 
நீராட்டி வயிறு நிறைத்து நித்திரை 
செய்யவென ஆயத்தம் செய்து என்
தாத்தாவின் கையில் தாலாட்டும் 
பொறுப்பு சிவபுராணம் தாலாட்டாய் 
தாத்தாவின் குரலில் சிறப்பாக அரங்கேறி
செவி நிறைக்கும் மருமகள் வேலை பளு
பங்கிடவென தாத்தா வந்ததும் அம்மா உன்
குணாவதியாய் சிறந்த குணம் தான் தாயே

காரணம் இல்லா ஓர் கதறல் 
இரவு பகலாகியது என் குரலில் 
தூக்கம் தொலைத்து பெற்றவர்க்கு 
விளக்கை அனைத்தால் வீறிடுதல் 
ஒளிரும் விளக்கில் புன்னகை என
வதைத்து விட்டேன் ஓர் இரவு
பகல் பொழுதில் உறங்கும் நான்
பாவம் என் அம்மா தான்!
இதே முறையில் என் மகனும்
எனை ஆட்டுவித்தான்
இரு முறை தான் ஆகவே
அம்மா பாவம் தானே !

தமையன் அழுகை கண்டு 
தவந்து அவனருகே சென்று 
ஆ,ஊ,ஊ என ஆறுதலாய் வினவ 
என் தமையன் எரிச்சலாய் போ 
வென்று உரைக்க கோபம் கொண்ட
நானும் உயிர் எழுத்து மொழியில்
கடிந்து உரைக்கஅழுத அண்ணன்
தனை மறந்து சிரித்தான்
என மழலை மொழியில்
மலர்ந்த பாசமலர் நிகழ்வைச்
சொல்லி பந்தம் வளர்த்த தாய்!

கூட்டுக் குடும்ப வாழ்க்கை 
கூடும் சொந்தங்கள் பல 
பொறுப்புள்ள மருமகள் 
குவியும் வேலைப் பளு 
அத்தையின் நிச்சயதார்த்தம்
விருந்தோம்பல் வேண்டும்
வயிற்றுப் போக்கில் நான்
கலங்கித் திரிந்த என் தாய்
கவலை விடு மகளே என
என்னை ஸ்வீகரித்த என்
வளர்ப்புத் தாய் பக்கத்து
வீட்டு பாப்பு அத்தை
இந்த பந்தம் உறுதியானது
எனத் தொடரும் தாய்பாசம்

மனம் முடிக்க காத்து நிற்கும் 
அத்தை சித்தி வீட்டில் இருந்தால் 
குறைவின்றி சீராடாலாம் பிள்ளை 
அத்தை மடி மெத்தையடி பாடாத 
அத்தை இல்லை சிரித்து மகிழ்ந்து 
சீராட்டி தாலாட்டா  சித்தி இல்லை 
அவர் தம் மக்கள் வரும் முன்னே 
முதலாய் வந்த பெண் மகவு இவர் 
உள்ளே குடிகொண்ட தாய்மையை 
அவர்க்கே உணர்த்தும் ஆசான் 
தூக்கி்யே திரியும் அன்னைக்கு
துவண்ட பொழுது துணை நின்ற 

அத்தையும் சித்தியும் அம்மா தான்

ஐயிரு திங்கள் பிரண்டு படுத்தால் 
கொடி சுற்றும் நிமிர்ந்து படுத்தால் 
மூச்சு முட்டும் குளிர்ச்சி உண்ண 
சளிப் பிடிக்கும் சூடாய் குடிக்க 
சுட்டிடுமோ பயரு தின்ன வாயு
பயந்து பக்குவம் பார்த்து கடும்
காஸாயம் குடித்து பிரசவித்து
சோறும் நீரும் உண்ணாமல்
காய்ந்த ரோட்டி பால் என பத்தியம்
குருதியியை பாலாய் புகட்டி தன்
சக்தி எல்லாம் தன் சேய்க்கே என
பத்து மாதம் அகத்தில் தாங்கிய
தன் மகவை மார்பில் மறைத்து
மடியில் இருத்தி இடுப்பில்இடுக்கி
மலம் ஜலம் அள்ளி மருந்திட்டு
இளம் வெயிலில் கிடத்தி வெந்நீர்
விலவி மேனி கழுவி சட்டென
துடைத்து வஸம்பு சுட்டு பொட்டு
கண் படாமல் காக்க வேஷமாய்
மை பொட்டு கோரோசனை உரசி
உள்ளுக்கு கொடுத்து அழுத்தாத
சொக்காய் மெல்லிய துணியில்
அண்டக்கொடுத்து சேலை தொட்டியில்
பக்குவமாய் இட்டு ஆராரோ பாடி
அப்பப்பா சொல்லும் போதே
கிரகம்,அனைத்தும் அறிந்தும்
நான்கு பிள்ளை பெற்று வளர்த்த
எங்கள் அன்னைக்கு வந்தனம்


அழுத பிள்ளை பால் குடிக்கும் 
அழும்முன்னே பால் சுரக்கும்
தாய்மை தனங்கள் தவமிருக்கும் 
பால் அருந்தும் பட்டுப் பிள்ளை 
பாதியில் உறங்கும் கால் தடவி
கை சுண்டி விழிக்க வைத்து
சுவைய வைத்து வயிறு நிறையும்
பசியாரும் அரும்பும் நிறைவயிறு
அமுதம் அருந்தி நிம்மதி பெரும்
தலை நின்று குப்புறப்படுத்து
தவழ்ந்து வரும் வேலை முட்டி
மண் பட முகம் சுழித்து அழும்
மகவை தேற்றி ஊக்கம் தர
தவழும் பிள்ளை தாவிவரும்
தட்டி விடும் பால் கின்னம்
ஊர்ந்து வரும் மகவு கண்டு
உயர்ந்து விடும் பொருட்கள்
தன் மகவு செய்யும் குறும்பு
மாயக் கண்ணன் செயலென
மகிழ்ந்து நிற்கும் யசோதை
மருகி உருகி எழுதினாலும்
அதை கேட்க நீ இல்லை என்
செய்வேன் என் தாயே !



தொலைத்தவர் தான் தேட இயலும் 
இருக்கும் வரை அறியார் மதிப்பு 
இதுவே மனிதன் இயல்பு எனில் 
என்னால் மட்டும் என்செய்இயலும் 
முடிவில் நிம்மதி பெற்றவள் நீ
பறவைகள் சிறகு பெற்றது இனி
தாம் தேவை இல்லை என் புவி
மறந்து வான் புகுந்தாய் பிள்ளை
தாமே முனைந்து கரை சேரட்டும்
என நட்டாத்தில் தவிக்க விட்டு
சுயநலமாய் உயரே பறந்து உன்
தமக்கையுடன் உரையாடி மகிழ
சொர்க்கம் நோக்கி உயர்ந்தாய்
நல்ல வேலை நீ சென்ற வேலை
சில கொடுமை பார்க்கவில்லை
நீ இருந்திருந்தால் அது நடவாது
விதிக்கும் நின் மகனின் அருகே
வர துணிவு இருந்திருக்காது
கேட்பார் இல்லை எனும் துணிவு
விதிப் பயல் விரைந்து வீணாய்
உன் மக்களை பிரித்தது பார்
தாய் இல்லை எனும் ஒரு குறை
களைய வந்தாய் நின் தலைவன்
இல்லை எனஎமை ஏமாற்றி உன்
ஏக்கம் தீர்க்க உயரே பறந்தாய்
நான் நோக்க இயலாது கீழிருந்து
மேலோகம் நீ சற்re குனிந்து கீழ்
நோக்கு கருணை கொண்டவள்
தாய் என தரனி போற்றட்டும்

ஐந்து மாதம் வரை பிள்ளை சமத்து
தவழ தெரிந்த நாள் முதல் அதன் 
அட்டகாசம் தாங்காமல் அழுகை 
வரும் தாய்க்கு தவழ்ந்து தாவி 
திரவப் பொருட்களை கவிழ்த்து
மகிழும் அது மட்டும் இன்றி சிதறி
கிடக்கும் பொருளை ருசிக்கத்
தொடங்கும் அங்கே ஆரம்பம்
வயிற்றுப் போக்கு எனும்சங்கடம்.
இதில் என்னை விட அதிக முறை
எண்ணைக் கொட்டி அன்னையை
களங்கடித்த பெருமை என்அருமை
தந்கையைச் சேரும் மூலையில்
அமர்த்தி தலையணைச் சிறையில்
அணைக் கட்டி அமர கற்றுத் தந்து
தானே அமர தைரியம் தருவாள்
நிற்க பழகும் வேலை மரஸ்டூலை
திருப்பிப் போட்டு அதன் நான்கு
கால் சிறையில் பாதுகாத்து தானே
நிற்க நம்பிக்கைத் தருவாள் அடி
எடுத்து வைத்து நடக்கும்போது
விரல் பிடித்து விழாமல் காப்பாள்
எட்ட நிறுத்தி கிட்ட வர ஆசைக்
காட்டி எட்டு வைக்க பழக்குவாள்
தாய்க்கு உலகமே சேய் எனமாறும்
தன்நலம் மறந்த தாய் உள்ளங்கள்
தரனியில்நிறைந்த வரை தாய்மை
தழைத்து தங்கும் வரை அவனி
குறைவின்றி நீடூடி வாழும் !


முழுக் கையும் பற்றிப் பயிற்சி 
மூன்று விரல் பிடித்து முயற்சி 
நுனி விரல் தொட்ட தேர்ச்சி 
நடை பயிலும் பிள்ளைக்கு தாய் 
துளித் துளியாய் தரும் துணிவு
தளிர் நடை பயின்று தாவி உனை
தொட்ட தருணம் என் நினைவில்
நிழலாய் கூட நில்லாமல் போனது
என் மகவை நான் ரசித்த நேரம்
நின் மகவை நீயும் இப்படித்தான்
ரசித்திருப்பாய் நானும் என் தாய்
மடியில் சீராடிய செல்லக் குழந்தை
எனும் பெருமிதம் விழி நனைத்தது



ஓடி விளையாடுப் பாப்பா 
ஓடி விளையாட உன் துணை 
வேண்டுமே அம்மா பின்னே 
விளையாட்டாய் எனை பிடிக்க 
முடியாமல் தோற்க அகப்படாத
வீராங்கனையாக நான் ஜெயிக்க
தோற்ற பின் நீ கண் பொத்தி ஊம்
கொட்டி அழுது நடிக்க ஓடிவந்து
கரம் பற்றி உன் அழுகை நிறுத்த
கரம் நீக்கி பே... சொல்லி எனை நீ
சிரிக்க வைக்க உன் துணை தான்
விளையாட எப்போதும் வேண்டும்
அம்மா ! வருவாயோ அம்மா !




30\6\2015
எல்லாமே நீ தானே அம்மா!
பசிக்கு அழும் போது பால் 
புகட்டி பாசமுடன் பசியாற்றி
வயிறு வலியில் வாடி நிற்க 
வகை வகையாய் வைத்தியம்
செய்து வீரிடும் அழுகையின்
வகை அறிந்து தக்கபடி அதன்
சமாதானம் தேடி தீர்வு கண்டு
ஓடி விளையாடும் பொழுது
கால் தடுக்கி விழுந்தாலும்
என்னை வையாது மண்ணை
வைது இரண்டு அடி கொடுத்து
படாத அடிக்கு எண்ணை தேய்த்து
'சூ மந்த்ரகாளி' போட்டு மாயம்
செய்து வலியை மாயமாக்கி என்
முகத்தில் புன்னகை பூக்கள்
மலர்ச்சி தந்து பூரித்து நிற்கும்
அம்மா எல்லாமே நீ தானே!


மம்மு சுடம்மா மம்மு சுடு" சொல்லி 
கைவிரல் மடக்கி நீட்டி கவனமாக 
சொல்லும் வார்த்தை செவி மடுக்க 
"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு "என 
தலையாட்டி மகிழ்ந்து விளையாட
"தட்டலங்கா புட்டலங்கா " சொல்லி
கால் நீட்டி அசைத்து விளையாட
என பாட்டுடன் உடல் வலிமை சேர
முன்னோர் ஆக்கி வைத்த வழிவழி
வந்த செயல் பாட்டு பாடல்கள்
உள்ளங்கையில் பருப்பு கடைந்து
சோறு குழம்பு காய் கறி பாயாசம்
பிசைந்து உருட்டி அப்பா அம்மா
பாட்டி தாத்தா அண்ணா அக்கா
காக்கை குருவி என சொந்தம்
பந்தம் மட்டுமின்றி பறவை பட்சி
யாவரும் பசியாற பகிர்ந்துண்ண
முதல் வாழ்க்கைப் பாடம் சொல்லி
அன்னை வளர்ப்பில் குறையின்றி
வளர்த்து விட்ட உனக்கு எப்படி
எப்பிறப்பில் நன்றி தீர்த்து என்
பிறவிப் பெருங்கடல் நீந்துவேன்
விடை பகிர் என் தாயே!


கைப் பிடித்து நடைப் பயின்று 
கை விடுத்து தானே நடந்து 
சிறுதொலைவு நடையில் பெரும் 
திருப்தி அடைந்து இனி ஒரு அடி 
எடுத்து வைக்க மறுத்து இடுப்பில்
ஏறி உன்னை மூச்சு வாங்க சுமக்க
வைத்து போதும் இதனுடன் படும்
பாடு என நீ ஓய்ந்த நேரம் என்னை
மிஞ்சி உன்னை படுத்தவென்றே
என் தங்கை உன்தன் அகமடியில்
அமர்ந்து இருந்தால் இருகோடு
தத்துவம் நீ உணர என்றே உரு
கொண்டு வந்தவள் என் தங்கை
மசக்கை மக்கள் மணந்தவர் மற்றும்
மாமன் மாமி என சுற்றம் பார்த்து
உன் சுமையும் பார்த்து நீ வளர்த்த
நிலை கண்டு மிக்கப் பெருமிதம்
நான் கொண்டேன் அம்மா !


தான் வாழும் வாழ்க்கையில் தன் 
மகவுக்கு சேதி செய்முறையில் 
தருபவள் அம்மா அவள் வாழ்ந்த
காலம் பெண்ணியம் எனும்ஒன்று 
இத்தனை வலுப்பெறாத காலம்
அவர்கள் விட்டுக் கொடுத்து வாழ
குடும்பம் வாழ்ந்தது.அனுசரித்து
வாழ்ந்தார்கள் ஏமாந்து அல்ல
தவறும் கணவனை கட்டுக்குள்
கொண்டு வந்து குடும்பம் எனும்
அமைப்பில் அன்பால் கட்டி தன்
கூடு கலையாமல் காத்தவரங்கள்
மற்றவரிடம் காட்டும் பண்பு அவள்
அடிமைத்தனம் அல்லஅடுத்தவரை
அன்பால் ஆள்வதுஇன்முகத்துடன்
கலப்பற்ற அன்பு செய்தல் எனும்
வரம் வாங்கி வந்தவர் அரிது
எல்லோரிடத்தும் தன்மை காட்டி
எம் தாய் போல் அவர் தம் சேய்
யாம் இருத்தல் அரிதே ஆனால்
அவள் செய்கை எம் சிந்தை வரை
எட்டிப் பிடித்ததே அவள் வெற்றி
என் செய்கை யாவும் அவள் பெயர்
சிறக்க செய்ய முயல்வது அவள்
தம் கடன் தீர்க்குமோ அறியேன்!


தமிழக வரலாற்றில் களப்பிரர்
காலம் போல் நம் அனைவரின்
வாழ்விலும் களவாடப்பட்ட காலம் 
நிச்சயம் இருக்கும் அதை கடந்து 
ஒளிரும் வாழ்வில் நுழைவது
அவரவர் திறம் அத்தகைய பாடம்
அன்னைவழிக் கல்வியாய் வந்தது
தாம்பத்ய வாழ்வெனும் பெருவாழ்வு
சாதித்து நின்றனர் எம் பெற்றோர்
சமரச வாழ்வைத் தாண்டி சிறந்த
சம்சாரவாழ்வுஎனும் அடுத்தபயணம்
கைத்தலம் பற்றி கணவன் காரியம்
யாவிலும் இணைந்து திறம் பட
நடத்திய அம்மாவின் இந்தபேரன்பு
அப்பா மறைந்த பின்னர் அவள்
செயல்பாடு செப்பியது தாமும்
தன் பிள்ளைகளையும் சேர்த்து
வழி துணைக்கு வரும் கடவுள்
போல் அப்பாவை போற்ற
தகப்பன் இழந்த பிள்ளைகள்
தம்நம்பிக்கை உடையாமல்
காக்க பெரும் பயன் தந்தது
மாலுமிஇல்லாத கப்பலை
லாவகமாய் கரை சேர்க்க என்
அம்மைக்கு கிடைத்த திறம்
அப்பாவிடமிருந்தே.சோர்ந்து
அமராமல் கூடு கட்டத் திரியும்
சீட்டுக் குருவி போல் என் அன்னை
பறந்த வண்ணம் இருப்பாள்


No comments:

Post a Comment