Sunday, 21 June 2015

சில துளிகள்

சில துளிகள் 
இடியும் மழையும்
நந்தி மத்தளம் இடியாய் முழங்க
கூத்தனார் மகிழ்ந்து நர்தனம் ஆட
சிந்திய கங்கை மழையாய் பொழிய
நாயகி நகைப்பு ஒலி மின்னல் ஆனதோ ?
***********************************************************************************
ஆறே அறிவு 
ஒண்ணு முதல் ஆறு அறிவு வரை 
ஒவ்வொரு அறிவாய் உயிர்க்கு சேர்த்து
பரிணாமம் வளர்ச்சி தந்த பரமன் 
ஆறாம் அறிவாய் சிந்தையைத் தந்து 
பரிணாம வளர்ச்சிக்கு புள்ளி வைத்தார் 
சிந்திக்கும் அறிவே சிறப்பு என
வரமும் சாபமும் ஆக்கமும் அழிவும்
மகிழ்வும் துக்கமும் வந்ததும் அதனால்
சிந்தையில் சிக்கி தவிக்கும் மனிதன்
அதை அடக்கி அகவழி கடந்து தம்மிடம்
தகுதி இருந்தால் வரட்டும் 

என நினைத்தார் போலும்
 ***********************************************************************************
கயிறு 
உள்ளங்கை அளவு நார்கள் 
ஓர் அணியில் திரண்டு 
ஒருமித்து திரிந்து உறுதிப்பட 
முறுக்கேறிய பின்னர் 
புது நாமம் சூட்டிக்கொண்டன 
கயிறு என!
***********************************************************************************

அம்புலி மாமா
ஆகாய அரண்மனையில் 
ஆயிரமாயிரம் ஒளிரும் 
நட்சத்திர குழந்தைகள் 
மேகத் திரை மறைவில் 
கண்ணாமூச்சி ஆடி 
கதை சொல்ல வந்தார்
அம்புலி மாமா
***********************************************************************************
ஆடை 
ஊடும் பாவும் ஆகி 
கலவி மனம் புரிந்த 
பிரியின் காதலில்
பிறந்த பிள்ளை 
ஆடை
***********************************************************************************
ஐஸ்வர்யா 
மழை ஓய்ந்திருக்க 
சாரல் பொழிவில் 
சிமிட்டும் ஒளியில் 
சிறு கூடை குடையில்
பட்டி வந்து சேரா 
குட்டி ஆட்டைத் தேடி
வெறிச் சோடிய வீதியில்
அடியெடுத்து வைத்ததோ
இந்த அல்லி மலர்
***********************************************************************************
மெய்ஞானம் 
ஆழ்ந்த நித்திரை விடுத்து 
விழிக்கும் பொழுதில் 
மயங்கி நிற்கும் அறிவு 
நான் யார் ? என 
மெய்ஞான வினா எழுப்பி 
முடிவு தேட முயலும்
அவ்விதமே மேலும்
முன்னேற முடியாமல்
ஐம்பொருள் செய்த
ஆவி புகுந்த மெய்யுடம்பு
சார்ந்து நிற்கும் தன்
உலகாயத நிகழ்வுக்கு
விரைந்து வந்து சேரும்
அதிசயமான அந்த நிலை
அனுபவம் வாய்க்க
ஓரிடத்தில் அமர்ந்து
உள் நோக்க வேண்டும்
அமரவே அவகாசமின்றி
அலையும் மானிட பதர்
நான் எனும் அகந்தை
அகன்று ஐயன் பாதம்
அடையும் நாள் எதுவோ!
***********************************************************************************
யோசனை 
அரங்கேற காத்திருக்கும் 
ஆயிரம் யோசனைகள் 
தருணம் கிடைக்காமல் 
தவறியவை பல 
செயல் திறன் குறைவால் 
சிதறியவை சில
ஆகட்டும் பார்க்கலாம் என
காத்திருப்பில் சில,பல
செயல்பாட்டில் வந்து
சிறந்தவையாகவும் சில
சிந்தையில் உதிக்கும்
யோசனையே ! 

என்னுடையதாகவே இருக்கட்டும்
தவறுகள், அதற்காய்
கோபம் கொண்டு எனை விடுத்து
அகன்று விடாதே !
நீ இல்லாத நான்
ஜடமாய் ஆவேன் !

***********************************************************************************
தேடல் கொண்ட பறவை
தேடல் கொண்ட பறவை
கூடு விட்டுப் பறந்தது
எவர் கண்ணிலும் படாமல்
எத்திசையில் என சொல்லாமல்
சென்ற பயணம் சுகமா
இடைஞ்சல் ஏதும் உண்டா
சகாயம் கிட்டியதா 
சாதித்து நின்றதா
எதைத் தேடி பறந்தது
தேடியது கிட்டியதா
முன்னவரை சந்தித்ததா
விடை கிடைத்ததா
விடைமேல் அமர்ந்தவர்
பேட்டித் தந்தாரா
தெரிந்து சொல்வர்
யாரும் இல்லை

***********************************************************************************
மரங்கள் குளித்தன

மரங்கள் குளித்தன 
குளிரில் இலைகள் 
சிலிர்த்து உதிர்த்தன 
சிந்தியது துளிகள் 
மண்ணில் சேர்ந்தன 
இலை மறுத்ததை 
வேர் உறிஞ்சியது 
உள்வழிப் பயணம்
தாய் வேர் தந்ததை
தவறாது பெற்றன
இலைகள் துளிர்த்தன
பூவாய் மலர்ந்தன
உயிர் தரும் நீரும்
முறையாய் பெற்றே

வளரும் மரங்கள்
***********************************************************************************
விண்ணும் மண்ணும்

அன்றும் இன்றும் ஒன்றே 
பகலில் சூரியஒளி கூச
விண்ணில் விரவிய எழுத்து 
கண்ணில் படாமல் போனதோ 

இரவில் வரும் குளிர் நிலவு 
மங்கிய ஒளி தந்து மதியின்
கண்களை திறந்து தரிசனம்
விண்ணில் விரவிய எழுத்து

முன்னர் அம்புலியில் அமர்ந்த
அவ்வைப் பாட்டி கதைக்கும்
கண் சொருக காது கொடுத்தால்
நித்திரை தழுவும் வரை நீட்டி
கதைத்து விட்டுப் போகும்

ஆனால் இன்று பாட்டி இல்லை
யாரோ யவரோ ஏதோ சொல்லி
விடுகதை விடுத்து சிறிது அவிழ்து 
மீதியை கட்டி கண்ணா மூச்சி ஆடி

மறைந்து நின்று புன்னகை புரிய
புரிந்ததும் புரியாமல் பேதலித்து
பாட்டியின் மடி தேடி ஓட முயற்சி
பாட்டி ஆறுதல் சொல்கிறது

அதே கதை தான் ஒரே நாளில்
பயந்து மலைக்காதே ஒவ்வொரு
நாளும் சிறு துளி முடிச்சு உனக்கு
அவிழ்ககப்படும் களங்காதே என!
***********************************************************************************
மாய மறைவு
கனத்த மௌனம்
கலவையாய் உணர்வு
அறிவு எட்டியதை
மனம் மறுக்க
நிதர்சனம் தான் 
மனித உடல் மறையும்
ஆன்மா நம்மில் எனில்
புற உலகு கண்டவுடன்
புவி உலகை விண்டிடுமே
பின்னர் ஹாஸியம் பேசா
நவரஸம் மறந்து ரகசியம்
அறிந்த சித்தன் போலே
புன்னகை சிந்தும்
மாயா உலகின் கட்டு
நியதிப்படி செல்லும் என
கட்டுண்டு பார்த்து நிற்கும்
கணவில் சில உணர்வில் என
வேடிக்கைக் காட்டி விட்டு
பந்தம் துறந்து பதியை நோக்கி
பயணப்பட துடிக்கும்
நம்மவர் என எண்ணியதை
கூட்டில் கட்டி வைக்க
இயலாத ஈனப் பிறவி நாம்
காற்றில் கலந்ததை கவர்ந்து
கரைக்க இயலுமா
வாய்க்கு பத்தாமல் சில
சொற்கள் உதிர்த்து தன்
நிலைத் தேற்றி இயற்கை
இதுவென உணர்ந்து
காலப் போக்கில் கடந்து
உணர்வாய் உந்தியவை
நிகழ்வென தெளியும்
மனது பண்பட தெளிவு பெற
நிலையாமை புரிபட
நிகழும் நிகழ்வுகள்
மாய மறைவுகள்

***********************************************************************************

உணர்வுப் பறவை 

உணர்வுகளும் புதிதில்லை 
உணர்பவரும் புதிதில்லை 
முன்னரே அனுபவம் உண்டு 
முயற்சிகள் வெல்லும் இன்று 
பழம் பறவை புதிய கூடு 
புது கூடு கண்டதன் விளைவு
பறவை கொண்டது பிறழ்வு
பிழையும் பறவையது அன்று
முன்னவர் செய்த மறைத்தல் அது

மறைந்தவர் நினைவில் மயங்கி
அவர் தம் அன்பை நினைந்து 
உணர்வில் உழன்று நிற்பதுவும்
எம் கடன் தான் அது தவறில்லை
மனிதன் என் பிறப்பெடுத்து
மனிதம் கொண்டே சில நாட்கள்
உணர்வுக் குவியலில் உட்புகுந்து
அனுபவித்து அயர்வுருவேன்

தரனி செல்வாயென தள்ளிவிட்டு
உணர்வு குவியலில் உழலவிட்டு
உழன்று கரைந்து கரையேரும்
என உயர இருந்தே நோக்குபவா
சமயம் உண்டு சண்டையிடுவோம்

No comments:

Post a Comment