அவளும் அன்னைதான்
நொடியில் மதி இழந்தாள் கைகேயி.
நொந்து வெந்து அனுதினமும் மரிகின்றாள்
சனத்தில் செவி கொடுத்தால் மந்திரைக்கு
சாயும் நாள் வரையில் விசனப்பட்டாள்.
ஆசை காதலியாய்,அன்பான மணைவியாய்
அந்தபுரத்து நாயகியாய், அந்தஸ்து மிக்க அரசியாய்
தசரதன் மனம் கவர்ந்த தேவதையாய் இருந்திருந்தாள்
சக்காளத்திகளையே சகியாக பெற்றவளாய்
நன் மகன்கள் நால்வரை பெற்றவளாய்
பேதம் பிரித்தறியா பேதையாய் இருந்திருந்தாள்
பண்டு பகீரதன் ஆண்ட ராஜ்ஜியம்
அன்று அரிச்சந்திரன் அமர்ந்த சிம்மாசனம்
இன்று தசரதன் கை செங்கோல் -யாவும்
தன் தலைமகன் ராமனை சென்றடையும் என்று
பட்டாபிஷேக கோலத்தில் அவன் அழகை காண
ஆனந்தமாய் அந்நாளை எதிர்நோக்கி இருந்திருந்தாள்
கூன் முதுகை தள்ளி,வந்து சேர்ந்தாள் மந்திரை
கேகேயன் நாடு பெற்றமகளின் சிந்தையில்
ராமனுக்கு புது அடையாளம் புகுத்தி விட்டால்
கோசலை மைந்தன்,சீதையின் நாயகன் என்று!
சிந்தை குழம்பி நின்ற மங்கையின் நினைவு அதை நிறைத்தாள்
ராமன் அரசாண்டால் பரதன் அவன் சேவகன் ஆவான் என்றும்
அவன் தாய் நீயும் ராஜமாதா கோசலையின் தாசியாவாய் என்றும்
இதற்கு மாற்றுவழியும் மந்திரை துர் உபதேசமாய் செய்துவித்தாள்
தன் நிலை தாழக் கூடாது என்ற நினைவில் தரம் தாழ்ந்தாள் கைகேயி
இயல்பு நிலை விடுத்தாள் கோபம் கொண்ட பிடாரி கோலம் பூண்டாள்
தன் இனியவளிடம் மனதை பகிர வந்த மன்னன் திகைத்து நின்றான்.
மனைவியை தேற்ற முனைந்தவன் சிலையாய் சமைந்து நின்றான்
பரதன் நாடாள,ராமன் ஈரேழு வருடம் காடாள இருவரத்தை பெற்றாள்.
திராவகமான வார்த்தைகள் வரமாய் பெற்றுவிட்டாள் பாதகி-தன்
சுய உணர்வை இற்றுவிட்டு மரம் போல் வீழ்ந்திட்டான் மன்னவன்
ராமனை அழைத்து வரத்தின் விவரம் தெரிவித்தாள் கல் மன தாய்.
அவனும் தன் இல்லாளும்,இளையவனும் பின் தொடர புறப்பட்டான்
கானகம் நோக்கி ராமன் சென்றுவிட பரதன் அயோத்யா நகர் புகுந்தான்
தெருவெங்கும் வெறிச்சோடி சூனியம் நிறைந்திருக்க திகைத்திட்டான்.
சாகேத் நகரம் ஆழ்ந்த சயனம் கொண்டதுபோல் வெறிசோடி இருக்க
சத்ருக்னனுடன் நகர் பிரவேசம் செய்தவன் விரைந்தான் விவரம் அறிய.
மிடுக்கான நிமிர்வு கொண்டு தாயவள் நடந்தவை நடந்தபடி சொல்ல.
பத்துமாதம் சுமந்தவளை பாவி என்று ஏசி,பரிதவித்து நின்றுவிட்டான்
மாபாதகம் செய்தாய் பாதகி , ரகுவம்சம் கொண்ட குலநாசினி -தீராபழி
நான் சுமக்கவும் செய்தாய், உன் மடி எனை ஏன் சுமந்ததுவோ என்றான்
உன் மகன் பட்டம் கொள்ள ஆசை கொண்டனையே இதோ கேள் இனி
ஒருபோதும் உன் முகம் காண மாட்டேன்,உன் மகன் இன்றே மடிந்தான்
என்று அக்னி கங்குகளாய் அள்ளி வீசி அவ்விடம் விட்டு.மறைந்தான்.
வரமாய் பெற்ற ராஜ்ஜியம் மகன் ஏற்கவில்லை நெற்றிகுங்குமமும்
அவளுக்கு நிலைக்க வில்லை,தகப்பனுக்கு ஈமகிரியை செய்யும்
பாக்கியமும் பரதன் பெறவில்லை மிஞ்சியது அவப்பெயர் மட்டுமே.
பத்து தலை அரக்கன் அவன் விதி கைகேயி சிந்தையை சகியாக்கியது.
இலங்காபுரி வீழ்ச்சி அது கூனியின் சொல்லை செவிமடுக்க வைத்தது.
வாலியின் வரம் அது வழிய வந்து இரு வரமாய் அவதாரம் கொண்டது.
இவையெல்லாம் காண்பார் எவரும் இவுலகில் உண்டோ -சில நாட்கள்
மாயை அது கைகேயி சித்தத்தை குத்தகை கொண்டது ,மொத்தமாய்
அவள் நற்பெயரை கொள்ளை கொண்டது,தீரா பழி கொள்ள செய்தது.
மாயைவிலகிய பின்னே,,மணாளனும் வெறுத்து விண்ணுலகு சென்றிட
மகனும் அவளை தவிர்த்து மரஉரி தரித்து தமையன் தரிசனம் காண
கானகம் நோக்கி அயோத்தி நகர்வாழ் மாந்தர் சூழ புறப்பட்டான்.
தான் செய்த பாவத்திற்கு பிராயசித்தம் தேட அவளும் உடன் சென்றாள்
ராமனை கண்டவள் கதறி அழுதாள்,மன்னிப்பு யாசகம் செய்திட்டாள்
சுய பச்சாதாபமேனும் தீ சுட்டெரிக்க ,மெழுகாய் உருகி கரைந்திட்டாள்
கைகேயி நிலை கண்ட ராமன் தாயே,உன் தவறு ஒன்றும் அன்று.விதி
செய்த வேலைக்கு நீ ஒரு கருவி மட்டும் தானே,கலங்காதே என்றான்.
தலை மகன் மன்னித்து தான் அவதார புருஷன் என காட்டிவிட்டான்
ராமனின் பாதுகை அரசாட்சி செய்ய,நகருக்கு புறமாய் பரதன் குடில்
அமைத்து ராஜ்யத்தை காவல் காக்க,அரண்மனை அந்தபுரத்தில்
தன்னையே நொந்த அந்த பேதை அவளுக்குள்ளே குமைந்திருந்தால்.
செப்புவார் மதி கேட்டு செப்ப இயலா சொல் உதிர்த்து அயோத்திக்கு
வாங்கி தந்தேன் ஈரேழு வருட தண்டனையை -உண்மையில்வனவாசம்
உனக்கல்ல உன்னையே நினைத்து உருகி நான் கடைந்தேற ராமா
பிரபஞ்சமே பெண்ணினத்தின் கெடுமதி உடையவள் என என்னை எண்ணிக்கொள் ஆயினும் என் மகனுக்கு நல்லதை எண்ணிய தாய்நான்
கெடுமதி பெண் இருப்பாள்.கெடுமதி அன்னை இருக்கமாட்டாள்.
நானும் தாய் தான் என் மகன் எனை தூற்றினாலும் ஏற்றுகொள்வேன்
என தன் தவறை தான் உணர்ந்து தவம் செய்யும் யோகினி போல் பழி
எல்லாம் ஏற்று இன்றும் நம் மனதில் வலம் வருகிறாள் கைகேயி.