Monday, 25 May 2015

சுமையை அகற்றுவோம்.

சுமையை அகற்றுவோம்.

சீவி முடித்து ரிப்பன் சூட்டி
சீருடை அழகாய் தரித்து
அடையாள அட்டை அணிந்து 
பள்ளி செல்லும் சின்ன சிறுமி

தன் திறன் முழுதும் திரட்டி
பளு தூக்கும் நங்கைபோலே
தன் புத்தக மூட்டையைத் தூக்கி

சற்றே உயர்ந்த இடத்தினில் நிறுத்தி,
பின்னே திரும்பி தன் கைகளை
லாவகமாய் அதன் பட்டையில் செலுத்தி,
தம் கட்டிய மூச்சுடன் முதுகினில் தூக்கி,

இடக்கரம் தன்னில் ஆகார பையை இழுத்து,
மற்றொரு கையில் செய்முறை படங்களை நிறுத்தி.
உண்டும்,உண்ணாமலும் ஓடும் நிலை கண்டு
எதற்குத்தான் இந்த சிட்டுக்குருவிகளுக்கு

இத்தனை சுமை என்று அங்கலாய்க்க,
அருகே வந்த அன்பு தோழி காட்டினால் காட்சி ஒன்று.

அழுக்கு படிந்த முகமும்,நைந்த ஆடையும்
பரட்டை தலையும் கண்ணில் சோகமும்
ஒட்டிய வயிற்றுடன் ஏழை சிறுமி.
தலையில் சுமையாய் கற்குவியல்,
பள்ளிப் படிப்பையே சுமையாய் தரக்கூடாது
என்று ஆயிரம் குரல்கள் எழுப்பிக்கொண்டு
கல்வியாளர் ஆராய்ந்து கொண்டிருக்க,

சுமையைச் சுமக்கும் வாழ்வே தமதென வாழும்,
இந்த பிஞ்சுகளின் வாழ்வைக் காக்க
மதிய உணவு தந்து பள்ளிக்கு வரவழைத்த
காமராஜர் முதலாய்  அனைவரும் முயல
நாமும் கைதருவோம் சுமையை அகற்ற!

வாழ்க்கை சுமையைச் சுமக்கும் வயதல்ல இவர்க்கு,
குறைந்தபட்ச கல்வியைத் தருவோம் இவர்க்கு,
விழுதாய் விழுந்த இந்த சிறு மலரும் கூட
வியந்து நோக்கும் ஆலமரமாய் ஆகும்.
இன்று இவர் தம் சுமை அகற்றுவோம்
நாளை அவர் இந்தியச் சுமை அகற்றுவர்!



No comments:

Post a Comment