அம்மா தாயி!
வண்ணம் கொண்டு வளைய வரும் வாழ்வில்
நிறமற்ற அல்லது மங்கிய நிறம் கொண்ட
சில பாத்திரங்கள் மனதில் பதியும்,
அதில் ஒன்றே அம்மா தாயி!
இது தினமும் என் வீடு தேடிவந்த
வினோதமான உறவு.
அழுக்கு புடவை, கலைந்த முடி,
சோகமுகம்,சோம்பல் தேகம்!
ஆறடி தூரம் வரும் போதே
குடலை புரட்டும் வாடை
கையில் தூக்கு போணி
இது தான் அம்மதாயீ!
தாயாக மாறும் முன்னே
என்னைத் தாயாக அழைத்தது,
பதின் பருவ சமையலையும் பாராட்டியது.
மிஞ்சிய சோறும் குழம்பும் அமிர்தம் அதற்கு!
தினமும் வீடு தேடி வரும் விருந்தினர் ஆனது
சில நாள் பழக்கத்தில் வாடிக்கையானது,
மிச்சம் வரும் வெஞ்சனம் சுடவைத்துப் பக்குவமாய்
பல நாள் அதன் வரவை காத்து நான் நின்றதுண்டு!
அம்மா தாயி என்று அதன் குரல் கேட்டு
உன் மகள் வந்தது என்று-என் கணவர்
எனை கேலி செய்யும் உறவானது.
காலங்கள் கடந்து மனக்கண்ணில் நிற்கும்
ஏழு வருட உறவு அம்மா தாயி!
No comments:
Post a Comment