Tuesday, 26 May 2015

குதிரை என்னம்மா ...... செய்யும்?

குதிரை என்னம்மா ...... செய்யும்?
ஆரம்ப பள்ளி படித்த இளந்துளிர் பருவம்.
தமிழ்,கணிதம் புத்தகம் மட்டுமே கண்டதுண்டு,
ஏ,பீ ,சீ,டி என்பது மட்டுமே ஆங்கிலம் என்போம்,
அறிவியல்,வரலாறு என்ற பாடங்களும் அறியோம்,
அதற்கென புத்தகங்கள் இருப்பதையும் அறியோம்.

ஒரு கோடு போட்ட நோட்டு இரண்டு உண்டு,
நாலு கோடு போட்ட ஆங்கில நோட்டு ஒன்று,
சிவப்பு கோட்டில் மார்ஜின் போட்ட கணக்கு நோட்டு.
இதுவே அதிகம் எங்கள் ஆரம்ப பள்ளிக்கு,
வீட்டுப் பாடம் எழுத நோட்டுகள் கிடையாது,

வண்ண வண்ண பிளாஸ்டிக் சட்டை போட்ட
சிலேட்டுகள் உண்டு வெவேறு அளவில்.
அதில் எழுதவென்றே உருண்டை மாவு குச்சி,
பட்டையாய் எழுத கட்டை குச்சி
வேகமாய் எழுதும் கட கட குச்சி.

ஆசிரியை கரும்பலகையில் எழுதும் போதே
மணனம் செய்து ,நகலும் எடுப்போம் நோட்டில்,
ஆனால் என் கையெழுத்து காந்திஜிக்கே சவால் விடும்,
அதனால் என் நோட்டின் துணையும்,
என் சொல்லின் துணையும் கொண்டு
அம்மா வேறு ஒரு நோட்டில்எழுதி வைப்பார்.

அண்ணன் ,அக்காள் சிலேட்டில் எழுதி வைக்கும்
வீட்டுபாடம் அளிக்கவென்றே தம்பி,தங்கை
தவழ்ந்து வரும்,அதில் பிழைத்து அழியாமல்
ஆசிரியை கையில் சேர்ப்பிக்கும் வரை
கண்ணும் கருத்துமாய் காக்க வேண்டும்.

ஒரு நாள் மாய்ந்து,மாய்ந்து நான் எழுதியதை
மறைத்து வைக்க மறந்து போக தவழ்ந்து
வந்த என் இளவல் அதை அளித்துவிட்டான்.
அன்று வந்த சோகம் இன்றும் என் நினைவில்.
குதிரை என்ன செய்யும் என்பது கேள்வி!

அழுகையும்,ஆற்றாமையும் ஒன்று சேர
குதிரை என்னம்மா ......செய்யும் என்று வினவ.
குதிரை வண்டி இழுக்கும்,புல்லு என்றால்
வாயை திறக்கும்,கொள்ளு என்றால் வாயை
மூடிக் கொள்ளும் என்று என் அம்மா பதில்சொல்ல.

இவ்வளவு பெரிய வாக்கியம் வேகமாய் சொன்னால் எப்படி,
அதுவும்,குதிரைக்கு சின்ன ரை வருமா,பெரிய றை யா?
வண்டிக்கு வரும் 'ண்' இரண்டு சுழியா,மூன்று சுழியா என
எத்தனை குழப்பங்கள் தமிழ் எளிது என்று யார் சொன்னார்?

எனவே ஒவ்வரு முறையும் மீண்டும் கேள்வி கேட்பேன்
அழுகையோடு..."குதிரை என்னம்மா ...... செய்யும்" என்று.
என் அம்மா பொறுமைசாலி சலியாமல் பதிலளிப்பார்.
வீட்டுப் பாடம் எழுதும் முன்னே வீடு இரண்டு பட்டது.
மூன்று வரி முடியும் முன்னே முப்பது முறை அதே கேள்வி!

பொறுத்து,பொறுத்து பார்த்த என் தாத்தாவுக்கே வெறுப்பு வர,
அடுத்த முறை நான் வினவும் போது வேகமாய் வந்தார் அவர்,
நான்.......குதிரை என்னம்மா ...... செய்யும்.....என வினவ
ம்ம்ம்.....குதிரை லத்தி போடும் என்றார்..............
கொள்ளுக்கு குதிரை வாய் மூடுமோ தெரியாது
என் தாத்தாவின் சொல்லுக்கு கொல்லென சிரித்தது வீடு.
அன்று முதல் என்னை வம்பிழுக்கும் அடுத்த
அஸ்திரமானது......குதிரை என்னமா செய்யும்!

No comments:

Post a Comment