Monday, 25 May 2015

அப்பன் பாடு கஷ்டம் தான்

அப்பன் பாடு கஷ்டம் தான்
ஆதி குருவாய் அனைவர்க்கும் தந்தையாய் அமர்ந்திருக்கும்
எந்தையை எத்தனை சொல் தான் சொல்லுமோ இவ்வுலகம்
கருணையே வடிவான கருணா மூர்த்தி எம் கயிலை நாதன்
எல்லா உயிரும் உய்வு எய்யட்டும் என பேராசை அவர்க்கு.
அண்டத்தை படைத்து அமைதியாய் தியானத்தில் இருந்தவர்,
பிரம்மன் படும்பாட்டை உணர்ந்து தன் பாதியாம் ஆதி சக்தியை
தன்னில் இருந்து பிரித்தெடுத்து வையம் வாழ வடிவு கொடுத்தவர்
சக்தியினை பிரிந்து துறவு நிலையில் துயரம் அனுபவித்தவர்
அமர நிலை பெற அரக்கன் ஒருவன் அவர்மகனால் மரணம் என
வரம் வேண்டி பெற,அதன் பின்னே அவன் ஆட்டம் சகியாமல்
சக்தியவள் தாட்சயனியாய் வந்து பிறந்து ,மகேசனை கரம் பிடிக்க
அதை விரும்பா தட்சனின் வீண் நிந்தனைகளை செவிமடுத்தவர்
பதியின் துர்துதியை சகியாத சதி மாதா தட்சனின் மகள் என்ற
பந்தத்தை துறந்து தன் தேகத்தை அக்னிக்கு இரையாக்க,சினந்து
கொடும்கனல் வீரபத்ரரை கொண்டு தட்சன் சிரம் கொய்ய அவனி
நலம் எண்ணி ஆட்டு தலை அவனுக்கு அளித்து உயிர்பித்தவர் .
சக்தியின் உடல் அள்ளி பித்தனாய் திரிந்து பெரும் அவதியுற்று போது
மாயவன் கை சக்கரம் கொண்டு சிதறப்பட்ட ஆதிசக்தி அங்கங்களை
சக்தி பீடங்கலாய் இந்த அவனிக்கு அளித்து காவலாய் பைரவரையும்
ஒவ்வரு இடத்திலும் ஸ்தாபித்து மீண்டும் பிரிவு துயரம் கொண்டவர்
பார்வதியாய் ஜனனம் கொண்ட அன்னை பரமனை அடைய கடும்
தவம் செய்து, காமனை காவுகொடுத்து இனிதே கைத்தலம் பற்ற
பின்னும் ஐயனை அமைதியுற விடாமல் தேவாசுர கலகத்திற்கு
பொறுப்பாக்கி தேவர் குலம் வேண்டிநிற்க கருணா மூர்த்தியானவர்
முனிவரின் சாபம் ஏற்று பெற்றபிள்ளையின் அழகிய சிரம் கொய்து
ஆணை முகம் தந்து,தேவர்கள் குறை தீர்க்க குமரனை சமருக்கு
அனுப்பி சூரனை முடித்து, அமிர்தம் வேண்டிய அமரர்க்காய்
ஆலகால விடம் அருந்தி கண்டத்தில் தாங்கி நீலகண்டரானவர்.
தடம் மாறி தவிக்கும் உயிர்கள், உயரிய இடம் நாடி வந்தடைய
அவனியின் நலனுக்காய் கிழக்கில் தன் பாதியை காளியாய் நிறுத்தி
மேற்கில் ஆனைமுகப் பிள்ளை தெற்கில் ஆறுமுகம் பிள்ளை என
தானே வடக்கில் வீற்றிருந்து வீடு பேரு அடைய அருளுகின்றவர்.
இது மட்டும் அன்று, காண்டிபனுடன் கட்டியுருண்டு, வேடவன்
காலால் மிதியுற்று,பாண்டியன் கையால் பிரம்படி பட்டு,சாக்கியன்
கையால் கல்லடி பட்டு, மார்கண்டேயனுக்காக பாசகயிற்றில் இறுகி,
சுந்தரனுக்காய் தூது சென்று பித்தனென்ற பட்டமும் பெற்று நின்றவர்.
இத்தனை செய்தும் கூட,இன்றைய மாந்தர் சங்கார மூர்த்தியாய்
சாவினை தருவிக்கும் கடவுள் என தவறாய் எண்ணம் கொண்டு
சிவன் சொத்து குல நாசம் என்று அச்சம் கொண்டு எட்டி நிற்க
மெய்ஞானம் உணர்த்திட தம் பக்தர்க்கு தட்சிணாமூர்த்தியானவர்.
புடம் போடும் தங்கம் மின்னும்,உளி தாங்கும் பாறை சிலையாகும்,
சம்மட்டி அடிவாங்கும் இரும்பு காக்கும் ஆயுதம் ஆகும் அது போலே
அனுபவ பாடம் படிக்கும் உயிர்கள் மேன்மையுறும் முக்திபெறும்
இவ்வாறாய் எத்தனை சித்தாந்தம் கூறினாலும் செவியுறா மாந்தர்
சுகம் பெரும் நேரம் சிவம் அதை மறந்து துக்கம் வரும் பொழுதில்
மட்டும் தூற்றும் குணம் கொண்டு வாழும் வரை ,இறவாத வரம்
வேண்டும் என்ற போகத்திலே மூழ்கி இருக்கும் வரை தளராமல்
உயிர்களை தாங்கி நிற்கும் என் அப்பன் பாடு கஷ்டம் தான்.

No comments:

Post a Comment