Monday, 25 May 2015

மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம்.!

மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம்.!
இலையுதிர் காலம் கடந்து இளந்தளிர் துளிர்த்து
பசும் பச்சை பட்டாடை உடுத்தி வசந்தகாலம் போல்,
கடந்த ஆண்டை பூர்ண ஜெயமாய் முடித்து 
குதூகலம் பொங்கும் மங்களம் தரும் வரமாய்
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
வெறுமை நிறைந்த வாழ்வை விரட்டி அதில்
வடுவாய் நிற்கும் தழும்பை மாற்றி
மயிலிறகாய் மனதை வருடி சுகம் தர
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம்!
கோடை வெயிலாய் தகித்த நிலையில்
வெக்கை தாழாமல் தவித்த நிலையில்
தூரல் மழையாய் தேகம் குளிர்விக்க
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
உருவிப் போட்ட வண்ணங்களை எல்லாம்
ஒன்று ஒன்றாய் மேலும் மெருகேற்றி
உயிரோட்டமுள்ள அழகோவியமாய்
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
மொட்டை வனமாய் மங்கியிருந்த தோட்டத்தை
மொட்டு விட்டு பூக்க செய்து மனம் பரப்பி,
துந்துபி வந்து மெட்டுக்கள் இசைக்கும் படி
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
பூக்கள் வண்டுகள் மூலம் காதல் தூது விட,
பறவைகள் தாமே தம் இணைகளை தேட,
விலங்கினமும் தன் பேடையுடன் கூட
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
விரக்தி கவி எழுதும் கவிஞரும் மாற,
புரட்சி கவிதாயினிகளும் பொங்கி மலர
எல்லாவற்றையும் லைக் செய்யும் மனிதருக்காய்
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
என் இனம் என பேசும் எழுச்சி மனிதருக்காக,
என் மதம் என மதம் பிடித்து திரியும் மானிடர்காக
எல்லாம் ஓரினம் அன்பே அதன் வடிவம் என உரைக்க
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
கணினி முன்னே காலம் கடத்தும் நங்கைகளுக்காக
இலக்கு முடிக்க பறந்து கொண்டிருக்கும் இளைஞனுக்காக
இனிதே இவர்களை ஏமாற்றி கடக்கும் காலத்தை நினைவூட்ட,
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
குழல் ஒலி ,யாழ் ஒலி ,பறை ஒலி பெரிது அன்று
தம் மக்கள் மழலை மொழி கேட்கவே தவிக்கின்றோம்
என்ற தம்பதியர் வேண்டும் பிள்ளை வரம் தந்திடவே
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !
சமாதி நிலை சென்றிருந்த சங்கரரை அவனியின்
அவசியம் கருதி வாளி தொடுத்து எழுபிவிட்டு தானே
சாம்பல் ஆகி உயிர்தெழுந்து சிருங்கார ரசனை கொண்டு
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம்!
வன்முறை கட்டு அவிழ்த்து ஆடும் நிலை மாறி,
அன்பும்,பாசமும்,நேசமும்,பெருகி காதல் மனம் பரப்பி,
தன் மனையாள் ரதி தேவி உடன் பிரியாத அவன் போலே
இந்த அவனியும் உற்ற துணையுடன் சுகம் பெற வாழ்த்தவே
மன்மதன் வந்தானாம்.நல்ல சங்கதி சொன்னானாம் !

No comments:

Post a Comment